jump to navigation

காணமறந்த கணவுகள் ஏப்ரல் 21, 2007

Posted by காற்றாடிக்கணவு in நான்.
trackback

விடியற்காலை பொழுது, அனேகமாக 4:30 மணியிருக்கும்… எல்லோர் வீட்டிலும் விளக்குகள் எரியத்துவங்கிவிட்டிருக்கும்… சுவர் கோழிகள் சத்தமும் சேவல்களின் கூவலும் ஆங்காங்கே கேட்டுக்கொண்டிருக்கும்… சில நிமிடங்களில் நேற்று காலை மூடப்படாத வீட்டுக் குழாய்களிலிருந்து சத்தமாக “சர்சக்-சர்சக்” என்ற சத்தம் வரும், சிறிது நேரத்தில் தண்ணீர் வர ஆரம்பிக்கும்… விடியற்காலை டீ கடைகளில் ஓரிருவரின் குரல் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும்…

சமயலறையில் ஏதோ உருட்டும் சத்தம் மெதுவாக கேட்கும்… கீழே ஒதுங்கி கிடக்கும் போர்வையை மெதுவாக என் மேலே இழுத்துவிட்டுவிட்டு செல்வார் அப்பா… மாட்டிலிருந்து பால் பீய்ச்சும் சத்தம் “சர்சர் – சர்சர்” என கேட்கும்… சிறிது நேரத்திற்கெல்லாம் “கொழந்தெ – கொழந்தெ, எழுந்திருப்பா இந்த காஃபிய குடிச்சிட்டு படுத்துக்க” என அம்மா போர்வையை விலக்குவார்… “இப்ப வேணாமா, அப்றமா குடிக்கிறேன்” என மறுபடியும் இழுத்து முகம் வரை மூட மறுபடியும் அன்புத்தொல்லை தொடர, அதை வாங்கி அவசர அவசரமாக குடிக்க…. “பாத்துப்பா நாக்கு சுட்டுடபோது, மெதுவா குடி” என்பதை கேட்டும் கேட்காமலும் குடித்துவிட்டு, மறுபடியும் போர்வையை நன்றாக இழுத்து மூடிக்கொண்டு ஏதோ ஒரு சுகமான உலகத்தில் சஞ்சரித்த்து போல இருக்கும்…

விடியல்பொழுதில் கணவுகளுக்கா பஞ்சம்…!!! வண்ண வண்ண தேவதைகள் கணவில், வானம்பாடிகளின் குரல்களிடையே தூரத்து மரத்திலமர்ந்து போட்டியிட்டு கூவும் குயில்கள்… கீச் கீச் என்ற குரல்கள்…

போர்வையின் ஓட்டைகளில் மஞ்சள் சூரிய வெளிச்சம் ஒருவித வெதுவெதுப்போடு தழுவும்… எழுந்திருக்க மனமில்லாமல் எழுந்து… வேகவேகமாக ஒரு சின்ன டவலையும்  – சோப்பு டப்பாவுடன் கொல்லையிலுள்ள கிணற்றங்கரையினில்… மார்கழி மாதம் சொல்லத்தேவையில்லை, கிணறு நிரம்பி வழியும் அளவிற்கு தண்ணீர் தளும்பிக்கொண்டிருக்கும்… அனேகமாக ஒரே நேரத்தில் பத்து பதினைந்து பேர் அங்கு சேர்ந்துவிட்டிருப்போம்… ஒரே கும்மாளம் தான் எங்களுக்கு… பம்பு செட்டிலிருந்து குட்டிக்கரணம் அடித்து… குரங்கு நீச்சல் அடித்து… இடையில் யார் ரொம்ப நேரம் தண்ணீருக்குள் மூச்சு பிடித்துக்கொண்டு இருப்பது என்று போட்டி வேறு… ஒருத்தன் கரையில் 1,2,3,4,….. மூச்சுவிட்டமல் எண்ணிக்கொண்டிருப்பான்…

தண்ணீருக்குள் விதவிதமான விளையாட்டு… நேரம் போவதே தெரியாமல் கண்கள் சிவந்து போகும் வரை எந்த கவலையும் இல்லாமல் குளித்துக்கொண்டிருந்ததுண்டு… எங்கிருந்தோ திடீரென கிணற்றுக்கு சொந்தக்காரர் விரட்டிக்கொண்டு வருவார்…

காதுக்கருகில் “டிங்-டிங்-டிங்” என்று சத்தம் மெதுவாக வந்து கொண்டிருந்தது… சிறிது நேரத்தில் ரொம்ப சத்தமாக ஒலிக்க ஆரம்பித்துவிட்டது… நேற்று இரவு மொபைல் போனில் 7:00 மணிக்கு வைத்த அலாரம் மேலும் பலமாக ஒலிக்க ஆரம்பித்தது….  சீக்கிரம் கிளம்பவில்லையெனில் ட்ராபிக் ஜாமில் மாட்டிக்கொண்டு ஆஃபீஸ்கு நேரத்துக்கு போகமுடியாதே… அவசர அவசரமாக எழுந்து பாத்ரூம் ஓடினேன்… குழாயை திறந்தால் சொட்டு தண்ணீர் கூட வரவில்லை… ஹவுஸ் ஓனர் மறந்து தூங்கிவிட்டாரோ… கீழே இரங்கி போய் மோட்டாரை ஓடவிட்டு, வேகவேகமாக தயாராகிக்கொண்டிருந்தேன்… !!!

மறுமொழிகள்»

No comments yet — be the first.